Friday, May 10, 2013

எங்கே தவறு செய்கின்றோம்???....


இன்று +2 முடிவுகள் வெளியாகியுள்ளது என்று எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதே நேரம் இன்று காலைப்பத்திரிகையில் காலமானாருக்கு பக்கத்தில் மடித்து சொருகப்பட்டுள்ள ஒரு விளம்பரத்தை நம்மில் பலர் கவனித்திருக்க மாட்டோம். அது ஒரு நிறுவனத்தின் விளம்பரம். அது என்ன நிறுவனம், யாரால் நடத்தப்படுகிறது என்ற விவரங்கள் இல்லாத விளம்பரம். இது போல பல அநாதை விளம்பரங்கள் தினம் பார்ப்பதால் நாம் எளிதில் தாண்டிச்சென்றிருப்போம். ஆகவே நின்று ஒரு நிமிடம் அந்த விளம்பரத்தைப் பாருங்கள்.



தனியார் கல்வி நிறுவனங்களின் சீட்டுகள் விற்கப்படும் என்பது ஒரு ஊரறிந்த ரகசியம். ஆனால் அதை விளம்பரம் செய்து விற்பது எவ்வளவு அயோக்கியத்தனம். இதைப்படிக்கும் போது பல கேள்விகள் எழுகின்றன. 

யார் இந்த நிறுவனம்?



இவர்களின் வெப்சைட்டில் Educational Consultants என்று போட்டிருக்கிறது. அனைத்து பெரிய தனியார் கல்வி நிறுவனங்களையும் தங்களின் பார்ட்னர் என்று போட்டிருக்கிறார்கள். அந்த பக்கத்தில் ஆகாயத்தை வளைப்போம் போன்ற இவர்களின் வாக்குறுதிகளை கழித்து விட்டுப் பார்த்தால் கவனத்தை ஈர்ப்பது ஒன்றுதான். வலது மூலையில் உள்ள Agent Login பட்டன். எதற்கு ஏஜென்ட் என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. இவர்களின் ஆபீஸ் எங்கே? எப்படி இத்தனை நிறுவனங்களிடம் தொடர்பு உள்ளது? இவர்களின் செயல்பாடுகள் எப்படி? எப்படி மார்க் குறைந்த மாணவர்களுக்கு சீட் வாங்கி தருகிறார்கள்? அப்படி பெயில் ஆகி சீட் advance booking செய்து படிக்கும் மாணவர்கள் எந்த லட்சணத்தில் MBBS படிப்பார்கள்? என்ற பல கேள்விகளுக்கு அந்த வெப்சைட்டில் பதிலில்லை.

இவற்றை வைத்து யோசிக்கும் போது இரண்டு சாத்தியங்கள்தான் தோன்றுகிறது. ஒன்று இது ஒரு டூபாக்கூர் நிறுவனம். ஏமாந்த மாணவர்களிடம் காசு வாங்கி விட்டு ஏமாற்றி விடுவார்கள். அப்படியென்றால் இது சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தெரிந்து நடக்கிறதா? காரணம் சீட் வாங்கி தரேன் என்று சொல்பவர் ஒரு முறை கூட அந்த கல்லூரிக்கு கூட்டி செல்லாமலா ஏமாற்ற முடியும்?

இல்லை இது உண்மையான நிறுவனம் என்றால் இது போன்ற அப்பட்டமான சட்ட மீறலை எப்படி அதிகாரிகள் அனுமதிக்கிறார்கள்? தனியார் நிறுவனங்களும் தங்களிஷ்டப்படி சீட்டுகளை நிரப்ப முடியாது....கூடாது....என்று பல உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளன. எல்லாவற்றையும் காற்றில் பறக்கவிட்டு ஒரு நிறுவனம் விளம்பரம் செய்கின்றது என்றால் அதற்கு அதிகார வர்க்கத்தின் ஆசி எந்தளவுக்கு உள்ளது?

இறுதியாக ஒரு கேள்வி – இப்படி ஒரு விளம்பரம் ஒரு முன்னணி பத்திரிக்கையில் வருகிறது. இதை படித்த யாராயிருந்தாலும் அயோக்கியத்தனம் என்று உடனே உணர்வார்கள். அந்த பத்திரிக்கையின் ஆசிரியருக்கு தெரியாதா? எல்லா விளம்பரங்களின் வாசகங்களுக்கு பத்திரிக்கை பொறுப்பேற்க முடியாது. ஆனால் அநியாயம் என்று தெரிந்தும் காசுக்காக விளம்பரம் வெளியிடுவது பத்திரிக்கை நெறிப்பிறழ்வு ஆகாதா?

தவறுகளற்ற சமுதாயங்கள் கிடையாது. ஆனால் அந்த தவறுகளை பகிரங்கமாய் நம் சமுதாயத்தில்  மட்டுமே அனுமதிக்கின்றோம்.

எங்கே தவறு செய்கின்றோம்???....

Wednesday, February 27, 2013

சுஜாதா நினைவலைகள்...

"துள்ளல் ஒசைத்தாய், நேரீற்றியற் சீரும், நிறைனடுவாகிய வஞ்சியுரிச் சீரும் வாராது, நிறை முதலாகிய வெண்பா விரிச்சீர்மிக்கு. நேரடித்தாய்க் கலித்தளையும் சுயற்றளையுந் தட்டுத்தரவு. தாழிசை எண்ணும் முதல் உறுப்பும் அராகம், அம்போதரங்கம். தனிச்சொல், சுரிதகம் எண்ணும் துணை உறுப்பும் உடைத்தாய் ஒத்தாழிசைக்கலி...."

மன்னிக்கவும். தமிழ்நடை எவ்வளவு மாறியிருக்கிறது என்பதை விளக்க இந்த வாக்கியம் (இன்னும் வாக்கியம் முடியவில்லை) யாப்பருங்கலக் காரிகைக்கு குணசேகரர் என்பவர் இயற்றிய உரையிலிருந்து எடுக்கப்பட்டது .

இத்துடன் ஒப்பிட, "நான் உன்னை யன்றி இலேன் கண்டாய் நாரணனே நீ என்னையன்றி இலை" என்கிற ஆழ்வார் வரிகளையும்,
எங்கேயோ நாய் ஒன்று குரைத்தது. அதைக் கேட்டு விட்டு இன்னொரு நாய் வேறு தெருவில் குரைத்தது. இரண்டும் வெகு தூரத்திலிருந்து  வந்தது. எதிர் வீட்டு வாசலில் மாட்டின் கழுத்து மணியோசை கேட்டது. விழுந்து வணங்குவது போல் ஒரு கூண்டு அரைவண்டி அவிழ்த்து விடப்பட்டிருந்தது. அதன் காலில் கட்டியிருந்த மாடுகளின் மணி சோம்பலுடன் ஒலித்தது..."
என்று மோகமுள் நாவலில் தி. ஜானகிராமன் நம் ஊர் கிராமத்தின் தூக்கமில்லாத இரவின் Mood ஐ சித்தரிக்கும் வரிகளையும் பார்க்கும் போது தமிழ்நடை சில நூற்றாண்டுகளில் வேகமாக வளர்ந்திருப்பதைக் காணலாம். தமிழ் வளரவில்லை, வளரவே இல்லை, தேங்கியே இருக்கிறது என்று பல்லவி பாடும் விமர்சகர்கள் தம் ஆயுளுடன் தமிழ் மொழியை ஒப்பிட்டு பார்க்காமல் பல்லாயிரம் ஆண்டுள்ள மொழியின் ஆயுளை வைத்துப் பார்க்க வேண்டும்.

எழுதிய வருடம் - 1966.

இத்துடன் 2005ல் சுஜாதா எழுதிய தன் எழுபது வயது நிறைவடைவதை பற்றிய  விகடன் கட்டுரையையும் படித்துப் பாருங்கள். தமிழ் நடையை எவ்வளவு தன் வாழ்நாளில் மாற்றியுள்ளார் என்று புலப்படும்.

இன்றுடன் தமிழ் அவரை இழந்து ஐந்து வருடங்களாகின்றன.

மாற்றம் மட்டுமே சாஸ்வதம் என்பதை புரிந்து இறக்கும் வரை அந்தந்த காலக்கட்டத்திற்கு தன்னை மாற்றிக் கொண்ட அவரை போன்ற இன்னொருவர் வருவாரா?

ஒரு வேளை இந்த ஒரு இழப்பு மட்டுமே சாஸ்வதமோ????....

Friday, December 14, 2012

பி.கு. நான் ரஜினி ரசிகன் இல்லை...

12-12-12 வந்தது... சென்றது...

ரசிகர்களால் பேஸ்புக் பக்கம் முழுக்க போட்டோ, வீடியோ என்று இணையத்திலும் போஸ்டர், ப்ளெக்ஸ் என்று தெருக்களிலும் ரஜினி நீக்கமற நிறைந்திருந்தார். பத்திரிகைகள், டிவிக்கள், ரேடியோ நிகழ்ச்சிகள் என்று அனைத்தும் ஸ்தம்பித்து ரஜினி புகழ்ப்பாடியது. 


இந்த கூக்குரல்களுக்கு இணையாக சில எதிர்க்குரல்களும் ஒலித்தன. "12-12-12ம் மற்றொரு நாளே... இது போல வெறிபிடித்து அலையாதீர்கள்..." இதுவே அவற்றின் சாரம். நியாயமாகவே தோன்றினாலும் அவர்களின் காலக்கோட்டில் சற்றே பின் சென்றால், அங்கே பாரதி நீக்கமற நிறைந்திருந்தார். ரஜினி ரசிகர்களுக்கு சற்றும் குறைவில்லாத வெறியுடன் பாரதி வாழ்த்தப்பட்டிருந்தார். ஏன் இந்த முரண்பாடு?

அதற்காக பாரதியும் ரஜினியும் ஒன்றா என்று கேட்பவர்களுக்கு, பாரதியானாலும் சரி, ரஜினியானாலும் சரி, அவரவர் தொழிலில் சிறந்தவர்கள்...அவர்களின் ரசிகர்களுக்கு ஆதர்ஷப்புருஷர்கள்... பாரதியை வாழ்த்துவதை ஏற்றுக்கொள்ளும் நாம் ஏன் ரஜினியை ஆராதித்தால் குறை கூறுகிறோம்? இதை செய்யாதே என்று அந்த ரசிகர்களுக்கு சொல்ல என்ன உரிமை நமக்கு உண்டு? இவரை இவ்வளவுதான் வாழ்த்தலாம் என்று முடிவு செய்யும் உரிமையை யார் தந்தது? ரஜினி ரசிகர்கள் வைத்திருப்பது பைத்தியக்காரத்தனமான அன்பென்றால், இறந்த ஒரு மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லுவதும் தமிழில் சாதித்த ஒரு கவிஞருக்கு "Happy Birthday to you" என்று எழுதுவதும் என்ன மாதிரியான அன்பு?

இந்த எதிர்குரல் எழுப்புபவர்களுக்கு என்ன பிரச்சினை? ஏன் ரஜினி மீது இவ்வளவு எரிச்சல்? அவர் என்றுமே தன்னை நல்ல நடிகனென்று தூக்கி நிறுத்திக்கொள்ளவில்லை. வியாபார நோக்கத்துடன் நடிக்கிறேன் என்று பல முறை ஒப்புக்கொண்டவர். யாரையும் தெரியாத ஒரு துறைக்கு வந்து விடாமுயற்சியாலும் வித்தியாசமான முயற்சிகளாலும் தன் குறைகளை எதிர்கொண்டு முன்னேறி இன்று ஒரு தலைமுறையே தன் கட்டுக்குள் வைத்திருப்பது சாதனையில்லையா? நம் சமூகத்தின் அடையாளமாகி விட்டது சினிமா... இங்கே திரையின் முகமூடிகளே நிஜ முகங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு விடுகிறது.முகமூடியை அணிய விருப்பமில்லையென்றாலும், அந்த முகமூடியை நம்பி வரும் ரசிகர்களை என்ன செய்வதென்பது புரியாமல் தானும் குழம்பி மற்றவரையும் குழப்புவது மட்டுமே ரஜினியின் தவறு. மற்றபடி தன் படம் ஓடுவதற்காக அரசியல் பேசுகிறார் என்பதெல்லாம் கற்பனை. பேசாவிட்டாலும் ஓடும்.

ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு அடையாளம் வாழ்க்கையில் தேவைப்படுகிறது. சுய அடையாளம் கிடைக்குமுன் நம்மை இப்படி இருக்க வேண்டும் என்று ஆசைப்பட தூண்டுபவர்களே ஆதர்ஷ மனிதர்கள்... அவர்களை கொண்டாடுவது அந்த ரசிகர்களின் அடிப்படை உரிமை. அதை தவறென்று அந்த ரசிகர்களின் முகத்துக்கு முன் சொல்வது அநாகரீகம். இந்த அநாகரீக எதிர்குரல்களை விட அந்த ரசிகனின் பைத்தியக்கார கூக்குரலே மேல்...

Thursday, November 22, 2012

சிறை: விலை நிலவரம்!


'பணம் புழல் வரைக்கும் பாயும்’. ஆமாம்தமிழகச் சிறைகளில் பணம் பேசும், சாதிக்கும், சலுகை வாங்கும், விளையாடும்.

சில மாதங்களுக்கு முன்பு 'உள்ளே போனஐ.பி.எஸ். அதிகாரி ஒருவர், 'என்னால் 555 சிகரெட் குடிக்காமல் இருக்க முடியாதுஎன்றார். 'ஓ... யெஸ்என்று வாங்கி வந்தார்கள். அதனுடைய ஒரிஜினல் விலை, ஒரு காட்டன் 1,050 ரூபாய். உள்ளே 10 டபுள் பாக்கெட்டுகள் இருக்கும். அதற்கு அவர் கொடுத்த விலை 25 ஆயிரம். சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் ஐ.பி.எஸ். அதிகாரி... பிளேடு பக்கிரி என்றெல்லாம் வித்தியாசம் கிடையாது. நீங்கள் கேட்பது எல்லாம் கிடைக்கும்... பெண்ணைத் தவிர. ஒவ்வொன்றுக்கும் ஒரு ரேட்!

சிறைக்குள் ஒரு பீடியின் விலை 10 ரூபாய். ஒரு பீடிக் கட்டின் விலை 100 ரூபாய். 'பரம ஏழைக் கைதிகளுக்காக ஒரு இழுப்புக்கு இரண்டு ரூபாய்... ரெண்டு இழுப்புக்கு ஐந்து ரூபாய் போன்ற மலிவு விலைத் திட்டங்களும் உண்டு. என்ன காரணமோ தெரியவில்லை, பெரும்பாலான சிறைகளில் காலம்தொட்டு கோல்டு ஃபில்டர் சிகரெட் மட்டும்தான் விற்கிறார்கள். ஒரு சிகரெட்டின் விலை 50 ரூபாய்.

தலா 10 கிராம், 20 கிராம் தொடங்கி 50 கிராம் வரை கஞ்சா உருண்டைப் பொட்டலங்கள் கிடைக்கும். தேவை என்று சொல்லிவிட்டால், சிறையின் அறைக் கதவுப் பூட்டின் பின்புறமாக ஒட்டிவைத்துவிடுவார்கள். இல்லை என்றால், கக்கூஸுக்குள் பார்சல் பண்ணுவார்கள். 10 கிராம் 200 ரூபாய். 50 கிராம் 1,000 ரூபாய்.

கைதிகள் உறவினர்களிடம் பேசுவதற்காக சிறைக்குள் லேண்ட் லைன் தொலைபேசி வைக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே சொன்னது. சில மாதங்களுக்கு முன், கோவை சிறையில் ரெய்டு நடத்தி மூட்டை, மூட்டையாக செல்போன்களை அள்ளிய பிறகே, சிறைக்குள் தொலைபேசி வைக்கப்படும் என்று அறிவித்தார் சிறைத் துறை ஐ.ஜி. சிறையில் சொந்தமாக செல்போன் வைத்து இருக்க ஒரு நாள் கட்டணம் 100 ரூபாய். கைதி மொபைலில் பேசினாலும் சரி... பேசாவிட்டாலும் சரி... இதைக் கட்ட வேண்டும். இந்தக் கட்டணம் சிங்கிள் சிம் கார்டுக்கு மட்டும்தான். டூயல் மொபைல்களில் கூடுதல் சிம் கார்டுகளைப் பயன்படுத்த, ஒவ்வொரு சிம் கார்டுக்கும் கட்டணம் ரூ.50. வார்டன்கள் நடத்தும் மொபைல் போன் பூத்களிலும் பேசலாம். மதுரை சிறையில் பி.எஸ்.என்.எல். தொடங்கி ஏர்டெல், ஏர்செல், ஐடியா மொபைல் வரைக்கும் வைத்து இருக்கிறார்கள். கட்டணம் கம்பெனியின் டாரிஃபை விட ஐந்து மடங்கு அதிகம்.
சிறையின் அறைக்குள் தாராளமாக டி.வி.டி. ப்ளேயர் போட்டு சினிமாவும் பார்க்கலாம். ஆனால், சொந்த டி.வி.டி. கூடாது என்பது எல்லா சிறைகளிலும் எழுதப்படாத ஆணையாம். இன்றைய நிலவரப்படி ஒவ்வொரு மத்திய சிறையிலும் 20 முதல் 50  டி.வி.டி. ப்ளேயர்கள் இருக்கின்றன. ஒரு நாள் வாடகை 500 ரூபாய். டி.வி.டி. ப்ளேயரை விட டி.வி.டி-களின் விலைதான் அதிகம். பழைய படத்துக்கு 250 முதல் 500 வரை ஓர் இரவு (அண்ணாவின் 'ஓர் இரவுபடம் அல்ல!) வாடகை.  புதுப் படங்களுக்கு 1,000 ரூபாய். கில்மா படங்களுக்கு வாடகை 3,000 ரூபாய். சிறைக்குள் கில்மா வகையறா டி.வி.டி-களுக்குத்தான் டிமாண்டு!

சிறைக்குள் பெண் கிடைக்காது என்றுதான் சொன்னேன். ஆனால், வாட்டசாட்டமான பெண் சாயல்கொண்ட ஆண் கிடைப்பார். ரேட் 20 ஆயிரம் ரூபாய்க்குக் குறையாது. அதேபோல் இரண்டு ஹோமோ கைதிகள் நெருங்கிப் பழகினால்கூட, அது இலவசம் கிடையாது. காவல் காக்கும் வார்டனுக்கு 5,000 கட்டணம் அழ வேண்டும்.
 இவை எல்லாம் மேஜர் மேட்டர்கள். வீட்டுச் சாப்பாடு உள்ளே வருவதில் தொடங்கி, மார்க்கெட்டில் மட்டன் வரைக்கும் எல்லாம் கிடைக்கும். ஆளும் கட்சியால் நீண்ட நாட்களாக 'உள்ளே... வெளியேவிளையாட்டு நடத்தப்பட்டு, சமீபத்தில் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் அவர். புழல் சிறையில் அவர் இருந்தபோது வீட்டில் இருந்து நண்டு வறுவல், மீன் வறுவல், மட்டன் குழம்புடன் சாப்பாடு பெரிய கேரியரில் போகும். அதிகாரியின் அறையில் டேபிளில் வைத்து அதிகாரியுடன்தான் அவர் சேர்ந்து சாப்பிட்டார். ஆனாலும், டிப்ஸ் என்ற பெயரில் அவர் கொடுத்த கட்டணம் நாளுக்கு 5,000 ரூபாய்.

ஜெயில் வாழ்க்கை கஷ்டமோ... இல்லையோ, ரொம்ப காஸ்ட்லி!

நன்றி - டி.எல்.சஞ்சீவிகுமார் (டைம்பாஸ்)

Wednesday, November 21, 2012

தாக்கரேவும் வெறுப்பு அரசியலும் - ஒரு உளவியல் அலசல்

பால் தாக்கரே மறைந்தார். இறந்தவர்களைப் பற்றி தவறாக பேசக்கூடாதென்றாலும் தாக்கரேவின் சாதனைகள் என்னவென்று பார்த்தால் அதில் புகழ்ந்து பேச ஒன்றுமில்லை என்பது விளங்கும். ஒவ்வொரு பத்தாண்டுகளிலும் அவர் யாரோ ஒரு எதிரியை மராட்டிய மக்களுக்கு உருவாக்கியே செல்வாக்குடனிருந்தார். முதலில் தென்னிந்தியர்கள், அதன் பின் முஸ்லிம்கள், அதன் பின் வடஇந்தியர்கள், பெண்கள், என்று அவரின் வெறுப்புக்கு ஆளாகாதவர்களே இல்லை என்னுமளவுக்கு அனைவரையும் அவர் வெறுத்தார், வெறுக்க வைத்தார். தாக்கரேவின் சாதனை என்னவென்று பூதக்கண்ணாடி கொண்டு தேடினால் மிஞ்சுவது ஒன்றுதான். இந்திய அரசியலில் வெறுப்பு என்பது விளிம்போர அரசியல் கட்சிகளின் ஆயுதம் என்பதை மாற்றி ஒரு ஓட்டு உற்பத்தி செய்யும் அட்சயப்பாத்திரம் என்றாக்கியதே. அதில் எந்தளவுக்கு அவர் வெற்றிப்பெற்றுள்ளார் என்றால் அவரின் இறப்புக்கு பின் கூட அவரை பற்றிய கருத்துக்களை வெளியிட அனைவரும் தயங்குகின்றனர். சமீப தமிழக அரசியல் சமூக நிகழ்வுகளைப் பார்க்கும்போது தாக்கரேவை ஒரு மராட்டிய நிகழ்வாக மட்டும் கொள்ள முடியாதுள்ளது.  ஜாதி, மதம் மொழி என்ற மேல்பூச்சுகளை களைந்துவிட்டு பார்த்தால் எந்த ஒரு தீவிர இயக்கமும் இறுதியில் பரப்புவது ஒன்றையே - வெறுப்பு. தினம் பார்க்கும், பழகும் முகத்தைக் கூட அழிக்க துடிக்க வைக்கும் வெறுப்பு. "அடி" என்று தலைவன் உத்தரவிட்டதும் பாய்ந்து அடிக்கும் வெறி தோன்றுவது ஏன்? பப்புக்குள் நுழைந்து பெண்களை அடித்து இழுத்து வருபவர்கள், ஒரு இனத்தை மதத்தை ஜாதியை சேர்ந்தவர்கள் என்ற காரணத்தாலேயே அவர்கள் மீது வன்முறையை பிரயோகிப்பவர்கள், இவர்கள் எல்லாம் பல சமயம் சாதாரணர்களாகவே இருக்கின்றார்கள். வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பம் குழந்தை என்று வாழும் இவர்கள் எப்படி வன்முறையாளர்களாகின்றனர்?இந்த வெறுப்பு அரசியலின் உளவியல் காரணிகளை முடிந்தளவுக்கு இந்தப்பதிவில் பார்ப்போம். 

நாம் இயல்பிலேயே வன்முறையை விரும்புபவர்களல்ல. நம்மிடம் "இவன் உனக்கு எதிரானவன். அவனை அடி" என்று யாரும் சொன்னால் ஒப்புக்கொள்ள மாட்டோம். ஆகவே நம்மை மாற்றுவது எப்படி?  எந்த ஒரு போராட்டத்தின் ஆரம்பமும் நியாயமான காரணமாகவே இருக்கும். அதே போல் எந்த ஒரு இயக்கமும் நியாயமான காரணத்துடனே ஆரம்பிக்கப்படுகிறது. என் மாநிலத்தில் எனக்கு வேலையில்லை என்னும்போது அது நியாயமான காரணம். யாரும் ஒப்புக்கொள்ளும் நிஜப்பிரச்சினை. அதற்கு காரணம் என்னவென்று கேட்கும் போதுதான் தீவிர இயக்கங்களின் பார்வை மாறுபட ஆரம்பிக்கின்றது. பிரச்சினைக்கு காரணமான சிக்கலான சமூகக்காரணிகளை அவர்கள் எளிமைப்படுத்துகிறார்கள். திறமையின்மை, வேலையிடத்தில் நடந்துக்கொள்ளும் முறை என்பது
போன்ற நம்மைச் சுட்டும் விஷயங்களைப் பேசாமல் நமக்கு ஒரு எதிரியை தருகிறார்கள். அந்த எதிரியை வெறுக்கச் சொல்கிறார்கள். இதுதான் வெறுப்பு அரசியலின் முதல் படி. 

ஆனால் அதன் பின்னும் நாம் வன்முறையை கையாள மாட்டோம். அடுத்து பேச்சு. ஹிட்லர் முதல் இன்றைய ஜாதி அரசியல்வாதிகள் வரை அனைவரும் கடைப்பிடிக்கும் முதல் ஆயுதம் - பேச்சு. இது முதலில் ஜாடைமாடையாக சில சமயங்களில் நகைச்சுவையுடன் இருக்கும். அது மெல்ல பரவும்போது நம் சமுதாயம் அதிகம் கண்டுக்கொள்ளாது. இதனால் ஈர்க்கப்பட்டு வருபவர்களிடம் இந்த தலைவர்கள் போடும் முதல் கட்டளை - எதிராளியிடம் உள்ள தொடர்பு அனைத்தையும் கத்தரி, நம்மை சேர்ந்தவர்களுடன் மட்டுமே பழகு  என்பதே. தாக்கரேவின் மராட்டியர்களுக்கான 12 கட்டளைகளில் இது தெளிவாக இருந்தது. அதேபோல் எதிராளிகளை இழிவுப்படுத்தவும் இவர்களைப்போல் கிண்டல் செய்யவும் இவர்களின் அடிப்பொடிகள் ஆரம்பிக்கும். அதையும் ஊக்குவிப்பார்கள்.

அடுத்த படியாக வெளிப்படையாக வெறுப்பை உமிழ ஆரம்பிப்பார்கள். சமூகம் இப்பொழுது அவர்களைத் திரும்பிப்பார்க்க ஆரம்பிக்கும். இந்த சமயத்தில் அதிகாரவர்க்கம் அவர்களை எப்படி எதிர்க்கொள்வதென்ற குழப்பத்தில் இருக்கும். அதன் எந்தவொரு நடவடிக்கையும் அவர்கள் சூழ்ச்சியாகவே வருணிப்பார்கள். ஏற்கெனவே எதிராளியுடன் எந்த தொடர்பில்லாமல் இருக்கும் மக்களிடம் இந்த உருவாக்கம் பயத்தை பரவ செய்யும். அடுத்தப்படியாக அவர்களுக்கு எதிர்க்கருத்து கொண்டவர்களை துரோகிகளாக்குவார்கள், அவர்களுக்கும் எதிரணிக்கும் தொடர்ப்பிருப்பது போன்ற மாயையை உருவாக்க ஆரம்பிப்பார்கள்.  திரும்பிய பக்கமெல்லாம் சூழ்ச்சியும் எதிராளியின் பயமுறுத்தலும் இருப்பது போன்றே இவர்கள் பேசுவது இருக்கும். பயமும் குழப்பமும் ஆட்கொண்ட இவர்களின் தொண்டர்கள் இந்நிலைக்கு அவர்களை ஆளாக்கிய "எதிரிகளை(!!!)" முழுமையாக வெறுக்கத் தொடங்குவார்கள். இந்த மன நிலை உருவாக்குவதே இவர்களின் நோக்கம். 

வெடிக்க காத்திருக்கும் இந்த எரிமலை மனிதர்களுக்கு அடுத்தப்பொறியை அவர்களே உருவாக்குகிறார்கள் அல்லது சில சமயங்களில் தானே அமைகிறது. சின்னதோ பெரியதோ இவர்களின் எதிராளிகளின் ஏதோவொரு செயல் அமைகிறது அல்லது அமைந்ததாக காட்டப்படுகிறது. ஏற்கெனவே வெறியில் உள்ள கும்பல் வன்முறையில் இறங்குகிறது. இதிலும் முதல் கட்டம் உடமைகளையும் மனங்களையும் சேதம் செய்வதாகவே இருக்கின்றது. சில வருடங்கள் முன் பீகாரிகள் மீதி சிவசேனையின் குட்டி MNS நடத்திய அட்டுழியம் போல். இது வரை உறங்கிக்கொண்டிருக்கும் சமூகம் விழித்துக்கொண்டு இவர்களை கண்டிக்க ஆரம்பிக்கிறது. ஓட்டை மட்டும் தேடும் அரசியல்வியாதிக்கு இது போதும். ஆனால் அதையும் மீறி போகும் போது நிகழும் வன்முறையே கலவரமாகி பலி வாங்குகிறது. 

இதை எப்படி எதிர்க்கொள்வது? ஜனநாயக சமுதாயத்தில் மிகப்பெரிய கேள்வி இதுதான். ஆரம்ப நிலையிலேயே இவர்களை அடக்கும் அதிகாரத்தை அரசாங்கத்துக்கு அளித்தால் அது எதிர்க்குரல்களையே ஒலிக்க விடாமல் தடுத்து விடும். அடக்காமல் விட்டாலோ அது என்றாவது ஒரு நாள் யாரையாவது காவு வாங்காமல் விடாது. இத்துடன் நம் நாட்டில் இந்தக் கூட்டம் ஓட்டுக்கு பயன்படுமா என்ற கவலை வேறு உண்டு. இன்றைய அசிங்க அரசியலின் ஆரம்பம் இதுதான்.

அரசாங்கம் தோற்கும்போது தனியொரு மனிதனாக நம்மால் செய்ய முடிந்தது நம்மை இது போன்ற வெறியூட்டல்களில் இருந்து காத்துக்கொள்வதுதான். தான் நடத்திய ஒரு இயக்கத்தில் ஏதோ ஒரு மூலையில் தன் தொண்டர்கள் வன்முறையில் ஈடுப்பட்டார்கள் என்ற காரணத்துக்காக அந்த இயக்கத்தையே நிறுத்திய காந்தி ஏனோ ஞாபகம் வருகிறார். எங்கே தொலைத்தோம் அந்த சத்தியத்தை?

Saturday, October 27, 2012

சின்மயி.... சில சிந்தனைகள்...

கடந்த வாரம் சின்மயி போலீஸிடம் ஒரு புகார் அளித்திருக்கிறார் என்ற செய்தி வந்தப்போது பத்தோடு பதினொன்றாக இதை மற்றுமொரு பிரபல்யர்களின் புகார் என்று அதிகம் கவனிக்கவில்லை. ஆனால் அதன் பின் தீடீரென்று ஒரு கார்டூனிஸ்ட் அதில் இடஒதுக்கீட்டையும் மீனவர்ப்பிரச்சனையும் பற்றி தவறாக பேசிவிட்டார் என்று குறிப்பிட்டிருந்தார். அதன் பின் சட்டென்று பெய்யும் சப்தமான மழையைப் போல் பல நிகழ்வுகள். சரி தவறென்ற விவாதங்கள். ஒரு கட்டத்தில் உண்மைக்கும் கற்பனைகளுக்கும் உள்ள பிரிக்கும் கோடு மங்கி அழியத்துவங்கி விட்டது. எதையும் ஆராயாமல் பேசக்கூடாதென்று அந்த நிகழ்வை பற்றி விவரங்கள் திரட்டினேன். என் கருத்தை உருவாக்கிக்கொள்ள உதவிய பதிவுகள்.

http://www.adrasaka.com/2012/10/blog-post_5516.html
http://www.adrasaka.com/2012/10/blog-post_24.html
http://www.twitlonger.com/show/fumfoi
http://www.chinmayisripada.com/2012/10/facing-abuse-and-backlash-of-rumours.html
http://www.rajanleaks.com/2012/03/blog-post.html
http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

எல்லாவற்றையும் படித்துப்பார்த்தால் ஒரு வித அசூயையும் அயர்ச்சியுமே மிஞ்சி நிற்கின்றது. என்ன காரணம் சொன்னாலும் , படித்தவர்கள் பேசும் பேச்சா இது? என்ற கேள்விக்கு பதிலில்லை. இணையம் என்பது பொதுவெளி. அவற்றில் இருப்பவை அனைவரின் பார்வைக்கு என்றானப்பின் வைக்கப்படும் கருத்துகளில் ஆபாசம் தவிர்ப்பது கடமை. கடமையை மீறும் போது வரும் பின் விளைவுகளுக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.

ஆனால் இந்த விஷயத்தில் பலரும் சின்மயி மீது வைக்கும் குற்றச்சாட்டு அவர் இடஒதுக்கீட்டுக்கு எதிராக பேசினார் என்பதே. அது ஒன்றே அவரை ஆதரிப்பதை தடுக்கிறது என்று பலர் கூறியுள்ளனர். ஆனால் அவர் கூறியதை விடவும் பல மடங்கு அதி தீவிரமாய் அதை பற்றி பலர் பல சமயங்களில் பேசி உள்ளனர். எந்த ஒரு கருத்துக்கு எதிர்க்கருத்து உண்டு. அதை வெளிப்படுத்துவது அவரவர் உரிமை. ஆனால் அந்த கருத்தை நீ தெரிவித்து விட்டாய்... எப்படி தெரிவிக்கலாம் என்று பாய்வது கருத்து தீவிரவாதம். இதில் அவரின் கருத்தை விட பலருக்கு பிரச்சனையாக இருப்பது அவரின் ஜாதிதான். சுஜாதா ஒரு முறை சொன்னதுதான் ஞாபகம் வருகிறது - இங்கே சிலருக்குத்தான் சில கருத்தை தெரிவிக்க உரிமை உள்ளது.

அடுத்து அவர் சிபாரிசு பிடித்து கைது செய்ய சொன்னார், தன் பிரபலத்தை அதற்கு பயன்படுத்திக்கொண்டார் என்கிறார்கள். அவர் பிரபலமாக இருப்பதால்தானே அவர் குறி வைக்கப்பட்டார். அதிலிருந்து தப்பிப்பதற்கு தன் பிரபலத்தை பயன்படுத்திக்கொண்டார். இதை சரியென்று சொல்லவில்லை. ஆனால் அந்த ஒன்றே எதிர்த்தரப்பினரின் செயலை நியாயப்படுத்துமா?

தமிழ் இணையத்தில் எங்கும் வசவுகளே அதிகம் உள்ளன. கம்யூனிஸ்ட்டுகள் பெரியார்வாதிகளை திட்டுகிறார்கள். பெரியார்வாதிகள் தலித் தலைவர்களை திட்டுகிறார்கள். ஆத்திகர்கள் நாத்திகர்களை திட்டுகிறார்கள். நாத்திகர்கள் ஆத்திகர்களை திட்டுகிறார்கள். எல்லாரும் காந்தியை தவறாமல் திட்டுகிறார்கள். இங்கே பொதுவானவர்கள் படிப்பதற்கு சமையல்கலை தளங்களும் திரை விமர்சனங்களும் மட்டுமே மிஞ்சி உள்ளன.

சின்மயி விஷயத்தில் மிகவும் பயம் தருவது அவரை எதிர்த்தவர்கள் உண்மையிலே யார் என்பதுதான். இவர்கள் சாமானியர்கள். எந்த ஒரு இயக்கத்துடனோ தொடர்பில்லாதவர்கள். பெரிய கொள்கைவாதிகளோ புரட்சியாளர்களோ இல்லை. ஆனால் அவர்களின் வார்த்தையில் தெரியும் வன்மம் - ஒரு கணம் அதிரவைக்கின்றது. எந்தளவுக்கு இவர்களுக்கு வெறியூட்டப்பட்டிருந்தால் இவர்கள் இப்படி பேசுவார்கள். இவர்கள்தான் சமுதாயம் என்றால் எதிர்காலத்தை நினைத்தால் பயம்தான் மனதை கவ்வுகிறது.

ஒன்று மட்டும் புரிகிறது ... இங்கு இன்றும் ஜாதி உயிருடன் நலமுடன் உள்ளது. என்ன காலத்துக்கேற்ப அப்டேட் செய்துகொண்டு பேன்ட் சட்டையில் நடமாடுகிறது. இணையம் உலகத்தையே திறந்திருக்கலாம். ஆனால் மனித மனங்களை திறக்கவில்லை. இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தையா நம் குழந்தைகளுக்கு நாம் தருகின்றோம் என்று நினைக்கும் போது மனதில் வெறும் அவநம்பிக்கையே மிஞ்சுகிறது.

Thursday, October 11, 2012

மின்வெட்டு... நிஜப் பின்னணி!

(சமீபத்தில் வந்த ஆனந்த விகடனில் படித்தது...)

இது 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை. மகாராஷ்டிரத்தில் மின் உற்பத்தி நிலையம் அமைக்க அமெரிக்காவின் 'என்ரான்’ நிறுவனத்தைக் கொண்டுவந்தார் அன்றைய காங்கிரஸ் முதல்வர் சரத் பவார். மகாராஷ்டிரத்தின் மொத்தத் தேவையில் 18 சதவிகித மின்சாரத்தை 'என்ரான்’ கொடுத்தது. அதற்கு மகாராஷ்டிர மின் வாரியம் கொடுத்த விலை என்ன தெரியுமா? முழு திவால்.    தேசிய அனல் மின்சாரக் கழகம் ரூ.1.80-க்கு ஒரு  யூனிட் மின்சாரத்தை விற்ற காலத்தில், 'என்ரான்’ நிறுவனத்திடம் ரூ.6.80 கொடுத்து வாங்கியது அரசு. தவிர, மகாராஷ்டிர மின் வாரியம் மின்சாரத்தை வாங்குகிறதோ, இல்லையோ... மின் கட்டணம் போக மாதம் ரூ.95 கோடியை நிலைக்கட்டணம் என்ற பெயரில் 'என்ரான்’ நிறுவனத்துக்குக் கொடுத்துவிட வேண்டும். அப்படி ஓர் ஒப்பந்தம். இந்திய மின் துறை வரலாற்றில் மறக்கவே முடியாத கொள்ளை அது.  இப்படி எல்லாம் நடக்குமாஎன்று தானே கேட்க வருகிறீர்கள்? தமிழக அரசு 2005-06ல் 'அப்போலோ குழும’த்திடம் இருந்து வாங்கிய மின் சாரத்தின் விலை என்ன தெரியுமா? ஒரு யூனிட் ரூ. 17.78.  ஒருகட்டத்தில் கட்டுப்படி ஆகாமல், மின்சாரம் வாங்குவதை நிறுத்தியதற்காக அதே ஆண்டில் 'அப்போலோ குழும’த்துக்குத் தமிழக அரசு கொடுத்த நிலைக்கட்டணம் ரூ.330 கோடி. இப்போதும்கூட தமிழகத்தில் உள்ள தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் வெளி மாநில நிறுவனங் களைவிடக் கூடுதலான விலையையே கேட்கின்றன. 

 மின்வெட்டு பிரச்னையைப் பற்றி எல்லோருமே பேசுகிறோம். ஆனால், அதன் பின்னணியில் இருப்பது வெறும் பற்றாக்குறை மட்டும் அல்ல; பல்லாயிரம் கோடிகள் புரளும் பன்னாட்டு அரசியல். நமக்கு மின்சாரம் என்பது வெறும் எரிபொருள். ஆட்சியாளர்களுக்கோ அள்ள அள்ள வரும் அரிய வளம். தாதுச் சுரங்கங்களை யும் அலைக்கற்றைகளையும் எப்படித் தனியாருக்கு விற்றுக் காசாக்கினார்களோ, அதேபோல, மின் வளத்தையும் விற்றுக் காசாக்குகிறார்கள். இதற்காகவே கொண்டுவரப்பட்ட அமைப்புதான் மின்சார ஒழுங்குமுறை ஆணையம். நாம் 14 மணி நேர மின்வெட்டைப் பற்றிய கவலையில் இருக்கும் இந்த நேரத்தில்கூட, இன்னொரு மின் கட்டண உயர்வுக்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. மாநில அரசுகள் விரும்பாவிட்டா லும், ஒழுங்குமுறை ஆணையத்தின் விருப்பப்படி கட்டண உயர்வு நடக்கும். 'மின்சாரச் சட்டம் 2003’ மின்சார ஒழுங்குமுறை ஆணையத்துக்கு அவ்வளவு அதிகாரங்களை அளிக்கிறது.

கடுமையான மின் பற்றாக்குறை நிலவிய மாதங்களில் ஒன்றாகக் கடந்த மாதத்தைக் குறிப்பிடுகிறது மத்திய மின் துறை. முரண்பாடாக, அதே காலகட்டத்தில்தான் பங்குச்சந்தையில், மின் உற்பத்தி நிறுவனப் பங்குகளின் விலை ஏழு சதவிகிதம் வரை அதிகரித்தது. எப்படி? நாட்டின் மின் உற்பத்தித் திறனை 1,22,000 மெகா வாட் ஆக அதிகரிக்க மன்மோகன் சிங் அரசு முடிவு எடுத்தது. பொதுத் துறை நிறுவனமான 'கோல் இந்தியா’ அரசு நிர்ணயித்த இலக்கில் பாதி மின்சாரத்துக்கான நிலக்கரியை மட்டுமே தர வல்லது. இதையே சாக்காகவைத்து, கூடுதல் தேவைக்காக இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி யின் விலைக்கு ஏற்ப, மின் கட்டணத்தை மாற்றி நிர்ணயித்துக்கொள்ள மின் உற்பத்தி நிறுவனங்களுக்குச் சமீபத்தில் அனுமதி அளித்தது அரசு. இதன் தொடர்ச்சியே பங்குகள் விலை எழுச்சி.

நாட்டின் மின் உற்பத்தியை நடப்பு ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 88,425 மெகா வாட் உயர்த்த அரசு இலக்கு நிர்ணயித்து இருக்கிறது; இதில் தனியார் பங்களிப்பு இலக்கு எவ்வளவு தெரியுமா? 52 சதவிகிதம்! முந்தைய ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் தனியார் பங்களிப்பு 19 சதவிகிதமாக இருந்தது. இந்த ஐந்து ஆண்டுத் திட்டக் காலத்தில் 52 சதவிகிதம். எனில், அடுத்த ஐந்து ஆண்டுத் திட்டத்தில்?

புதிதாக மாநில அரசுகள் மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்குவதை மத்திய அரசு ஊக்குவிக்கவில்லை. மறுபுறம் ஏற்கெனவே தன்வசம் உள்ள பொதுத் துறை மின் உற்பத்தி நிலையங்களையும் படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்க்கிறது. சமீபத்திய உதாரணம், நெய்வேலி அனல் மின் நிலையத்தின் 8.33 கோடி பங்குகள் விற்பனைக்குக் கொண்டுவரும் அரசின் திட்டம். இதன் மூலம் அரசிடம் உள்ள பங்குகள் 93.56 சதவிகிதத்தில் இருந்து 88.56 சதவிகிதமாகக் குறையும். தனியார் கை ஓங்கும்.

ஒருபுறம் இப்படி மின்சார உற்பத்தி தனியாரிடம் சிக்க, மறுபுறம் உற்பத்தியாகி வரும் மின்சாரமும் பெருநிறுவனங்களுக்கே அர்ப்பணம் ஆகிறது.உள்ளூர் தொழில் நிறுவனங்கள் 14 மணி நேர மின்வெட்டில் சிக்கிச் சின்னாபின்னமாக,     பன்னாட்டு நிறுவனங்களோ 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரத்தில் கிளைபரப்புகின்றன.

இந்தக் கொடுமை எல்லாம் கொசுக்களுக்குத் தெரிகிறதா என்ன? போர்வையைப் போர்த்தினால் வியர்க்கிறது; விலக்கினாலோ கொசு கடிக்கிறது!

நன்றி - சமஸ் (ஆனந்த விகடன் )


Monday, October 8, 2012

தவறாக சுழலும் சாட்டை...


"சாட்டை பாத்துட்டீங்களா.... டீச்சர்‌ஸ் எல்லாத்தையும் கிழிச்சுருக்காங்க சார்...” என்ற நண்பரின் பரிந்துரையை தொடர்ந்து நேற்று படம் பார்த்தேன். கதை ஒரு modified ஹீரோயிச கதை. “மிகவும் நல்ல” ஆசிரியரான கதாநாயகன் வேலைக்கு சேரும் அரசுப்பள்ளியை சில பல வித்தைகள் கற்று கொடுத்து முதல் இடம் கொண்டு வருவதுதான் கதை. கதை அத்துடன் நின்றிருந்தால் ஒரு “Feel Good” படம் என்று கொண்டு ஏற்றுக்கொண்டிருக்கலாம். ஆனால் கதாநாயகனை உயர்த்திக் காட்ட இயக்குனர் மற்ற அரசு ஆசிரியர்களை சித்தரிக்கும் பாங்கே நெருடுகிறது.

சாட்டை காட்டும் உலகம் ஒரு உதாரண உலகம். அதில் அனைவரும் ஏதோ ஒரு வகையில் நல்லவர்கள் – ஆசிரியர்களை தவிர. அங்கே “எப்படியாவது இந்த வருடம் ஸ்கூலில் பசங்களை சேர்த்து விடுங்கள்” என்று கட்டளையிட்டு ஊர் முழுக்க ஓட விடும் அதிகாரிகள் இல்லை... இலவசம் என்ற பேரில் அரசு கொடுக்கும் எந்த பொருளையும் தன் சொந்த செலவில் போய் வாங்கி, அதை திருடு போகாமல் பார்த்து அதில் ஒன்று குறைந்தாலும் அசிங்கமாய் திட்டு வாங்க வேண்டிய அவசியம் எந்த ஆசிரியருக்கும் இல்லை... மாணவர்களுக்கு காலணி வழங்கினால் கூட அதற்கு அளவுப்பார்க்க Training கொடுத்து ஆசிரியர்களை வேலை வாங்கும் அரசாங்கம் அதில் இல்லை... எல்லாவற்றுக்கும் மேலாக படத்தில் அனைத்து ஆசிரியர்களும் பாடம் நடத்துகிறார்கள்!!!!... அரசாங்கப் பள்ளிகளில் அதற்கு எத்தனை இடையூறு வருமென்று தெரிந்த ஆசிரியர்கள் இருந்தால் கேட்டுப் பாருங்கள்....

இது போன்று ஒரு முகமாய் ஒரு பிரச்சனையை சித்தரிப்பதின் விளைவு என்னவென்றால் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் என்றாலே இப்படித்தான் என்று ஒரு பிம்பத்தை இதுப்போன்ற படங்கள் மக்களிடையே உருவாக்கி விடுவதே. அதன் விளைவு அடுத்த முறை ஒரு பிரச்சனை என்றாலே எந்த தரப்பில் தவறென்று யோசிக்காமல் இவங்க இப்படித்தான் என்று ஒரு தீர்ப்பை வழங்க வைத்து விடுகிறது. சமீபத்தில் ஒரு ஆசிரியையை மாணவன் ஒருவன் குத்திக் கொன்று விட்டான் என்றதும் உடனே Facebook, டிவி என்று எல்லாவற்றிலும் கமெண்ட் குவிந்தது. அவற்றில் முக்கால்வாசி அந்த ஆசிரியை தவறு செய்திருப்பார் என்றே இருந்தன. இறந்தும் கொல்லப்பட்டார் அந்த ஆசிரியை. காரணம் – ஆசிரியர்கள் மட்டுமே தவறு செய்பவர்கள் என்று உருவாக்கப்பட்ட ஒரு பிம்பம். யதார்த்த வாழ்க்கை மிகவும் சிக்கலானது. இங்கே ஹீரோவும் கிடையாது வில்லன்களும் கிடையாது.எந்த ஒரு படமும் இதை முழுமையாக பிரதிப்பலிப்பது கடினம். ஆனால் இது போன்ற படம் எடுக்கும் முன் உண்மையிலேயே அந்த இயக்குனர் சமூகத்துக்கு கருத்து சொல்ல விரும்பிருந்தால் ஆசிரியர்கள் தரப்பையும் அவர்களின் பிரச்சனையை பிரதிபலிக்கும் விதமாக ஒரே ஒரு கதாப்பாத்திரம் வைத்திருந்தால் கூட கண்டிப்பாக பாராட்டியிருக்கலாம். அது போல் இல்லாமல் ஒரு கதாநாயகனை உயர்த்தி காட்ட மற்ற ஆசிரியர்கள் அனைவரும் மோசம் என்று காட்டியிருப்பது இயக்குனரின் குறுகியப் பார்வையையே காட்டுகிறது. இதற்கு 100 பேரை சுற்றி சுற்றி அடிக்கும் படம் எடுக்கும் இயக்குனர்கள் எவ்வளவோ பரவாயில்லை.

இந்த படத்தின் மற்றுமொரு கருத்து – எவ்வளவு மோசமான மாணவனாக இருந்தாலும் அவனை அன்பினால் ஒரு ஆசிரியர் சீர்த்திருத்த முடியும் என்பது. மிகவும் நல்ல உண்மையான கருத்து. இதை அனுபவப்பூர்வமாக நான் கண்டுள்ளேன். நான் 7வது படிக்கும் போது எங்கள் வகுப்பில் ஒருத்தி இருந்தாள். எப்போதும் கடைசி மதிப்பெண் எடுப்பாள். ஒரு முறை எங்கள் வரலாறு ஆசிரியர் அவளை நடு வகுப்பில் நிறுத்தி திட்டிக்கொண்டிருந்தார். அப்போது அங்கே வந்த எங்கள் வகுப்பாசிரியை வெளியே நின்று அதை கவனித்துக்கொண்டே இருந்தார். அடுத்தது அவரின் வகுப்பு. ஆனால் அன்று அவர் எதையுமே சொல்லித்தரவில்லை. வகுப்பு முடிந்து செல்லும் போது அவருடன் அந்த பெண்ணையும் அழைத்துச்சென்றார். அன்று பள்ளி முடிந்து செல்லும்போது அவளைப் பார்த்தேன். தனியே யோசனையாய் உட்கார்ந்திருந்தாள். சற்றே பரிதாபப்பட்டுவிட்டு சென்று விட்டேன். அதன் பின் அந்த பெண் வகுப்பில் தனியாகவே இருப்பாள். பேசவேயில்லை. ஒன்றில்லை இரண்டில்லை – 3 மாதங்கள். அடுத்த பரிட்சை முடிந்து ரேங்க் கார்ட் கொடுக்கும் வரை.... அவள் 4வது ரேங்க் வாங்கியிருந்தாள். அந்த கார்டை வாங்காமல் எங்கள் வகுப்பாசிரியையை கட்டிக்கொண்டு அழுத போது நாங்கள் எடுத்த மூன்று ரேங்க்களை விட அவளின் 4வது ரேங்கே உயர்ந்ததாய் தெரிந்தது. இந்த படத்தின் ஆசிரியர் திக்குவாய் பெண்ணை திருத்தும்போது எனக்கு அந்த பெண்தான் நினைவுக்கு வந்தாள். இன்று அந்த பெண்ணும் அந்த ஆசிரியையும் காலப்போக்கில் மறைந்து விட்டனர். ஆனால் அவரின் அந்த செய்கை உண்டாகிய பாதிப்பு இன்றும் மறையவில்லை.

மொத்தத்தில் சாட்டை படமென்று மட்டுமே கொண்டால் மிகவும் அருமை. ஆனால் சிலர் கூறுவது போல் படமல்ல பாடமென்று சொன்னால் மிகத் தவறான ஒருதலைப் பாடம்.

Friday, August 3, 2012

இதற்கும் போராடுவோம்...

செய்திதாளை விரித்தவுடன் கண்ணில்பட்ட செய்தி நீண்ட நாட்களாக என் சிந்தனையை தூண்டிய ஒரு விஷயத்தை பகிர்ந்துக்கொள்ள தூண்டியது. மாணவியை கற்பழித்த டாக்டர்... என்ற செய்தியே அது.

விஷயம் இதுதான். 

ஒரு +2 மாணவி காய்ச்சல் என்று ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த ஆஸ்பத்திரியின் மருத்துவர் அவரை கற்பழித்து விட்டதாக புகார் எழுந்துள்ளது. பத்திரிகைகள் அல்வா போன்ற விஷயம் கிடைத்ததில் அந்த டாக்டரே மறந்துப்போன பழைய விஷயங்களை பிரசுரிக்க ஆரம்பித்து விட்டன. அந்த குற்றச்சாட்டு உண்மையா?  பொய்யா? என்று சட்டம் தன் நத்தை வேகத்தில் முடிவெடுக்கட்டும். அதுவல்ல இந்த பதிவின் நோக்கம். இந்த சம்பவம் எழுப்பும் கேள்விகளும் சிந்தனைகளும் வேறு மாறியானவை.

சில காலமாய் மருத்துவர்கள் போராட வேண்டிய கட்டாயத்துக்கு அடிக்கடி தள்ளப்படுகின்றனர். ஒவ்வொரு முறை போராடும் போதும் பொதுவில் எழும் கேள்வி மற்ற பிரச்சனைகளுக்காகவும் இதே வீரியத்துடன் செயல்படுவார்களா என்பதே... Like it or Not... இது ஒரு நியாயமான கேள்விதான். இதற்கு கோபப்படுவதில் அர்த்தமில்லை. இதற்கு பதில் சொல்லும் கடமை மருத்துவ சமுதாயத்துக்கு உள்ளது. இந்த விவகாரத்திலும் அதே கடமையுள்ளது.

மருத்துவர்களுக்கென்று சில கோட்பாடுகள் உள்ளது. அதில் முதல் கோட்பாடு மருத்துவரை அணுகும் நோயாளிகளிடம் எந்த காரணம் கொண்டும் உணர்வுப்பூர்வமான உறவு கொள்ளக்கூடாது. நோயாளியிடம் தவறாக நடப்பதென்பதை விட பெரிய குற்றத்தை ஒரு மருத்துவர் செய்து விட முடியாது. அதுவும் Sexual offence is the worst form of an offence that a doctor can commit. Even Worse than Murder.

இது போன்ற சமயத்தில் மருத்துவ உலகம் என்ன செய்யப் போகிறது என்ற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் இருக்கிறது. என்ன செய்ய முடியும்... இந்த பிரச்சனையை எப்படி பார்க்கிறோம் என்பதில் உள்ளது பதில்...

மருத்துவர்கள் சமுதாயத்திலிருந்தே வருகின்றனர். ஆகவே அதில் இருக்கும் நல்லவன், கெட்டவன், எல்லோரும் உண்டு... ஆகையால் ஒருவர் செய்யும் தவறை அவர்களின் குணக்கேடாக கருதி இதற்கு ஒரு முக்கியத்துவம் கொடுக்காமல் நாம் நம் வேலையை கவனிக்க செல்லலாம். ஆனால் இந்த விவகாரம் அது போல் Ignore செய்ய கூடியதா என்றால் இல்லை என்பதே பதில்.

எழுந்திருப்பது கற்பழிப்பு குற்றச்சாட்டு. நடந்த இடமோ மருத்துவமனை. சொல்லியிருப்பது ஒரு பேஷண்ட். ஆகையால் மருத்துவ சமுதாயம் இதை கண்டுக்கொள்ளாமல் இருப்பதென்பது மறைமுகமாக அதை ஆதரிப்பது போன்றதாகவே பார்க்கப்படும்.

ஆனால் நம் சட்டத்தின் படி குற்றம் நிருப்பிக்கப்படும் வரையில் ஒருவர் நிரபராதியே. முந்தி கொண்டு நாம் அவரை தண்டிக்க வகையில்லை. நியாயமுமில்லை.

ஆனால் எதிர் பாலினத்தை சேர்ந்த பேஷண்ட்களை எவ்வாறு Examine செய்ய வேண்டும் என்று தெளிவான விதிமுறைகள் உள்ளன. அதன்படி எதிர்பாலினத்தை சேர்ந்த பேஷண்டை எக்காரணம் கொண்டும் தனிமையில் Examine செய்யவே கூடாது. வேறேதில்லாவிட்டாலும் அந்த டாக்டர் நிச்சயமாக இந்த விதிமுறையை மீறி இருப்பதால்தான் இந்த குற்றச்சாட்டு எழுந்திருக்கறது.

உண்மை எதுவாயிருப்பினும் இந்த விவகாரத்தில் மருத்துவ சமுதாயம் செய்ய வேண்டியது ஒன்றுதான்.

இந்திய மருத்துவ சங்கத்தின் சார்பில் இந்த வழக்கை சீக்கிரம் முடிக்க வேண்டுக்கோள் வைக்க வேண்டும். ஒருவேளை விசாரணை முடிந்து இந்த டாக்டர் குற்றவாளி என்று முடிவானால் பொதுவில் அந்த டாக்டரின் ரெஜிஸ்டரேஷன் கான்சல் செய்து அவ்வாறு  செய்யப்பட்டுள்ளதை விளம்பரம் செய்ய வேண்டும். அவர் அதன் பின் பணியாற்ற முடியாத நிலை ஏற்படும். அது இது போல் "சபலம்" தோன்றும் டாக்டர்களுக்கு எச்சரிக்கையாக இருக்கும்.

ஒரு வேலை அவர் நிரபராதி என்று தீர்ப்பானால் அந்த பெண்ணின் குடும்பத்தார் மேல் சங்கத்தின் சார்பில் மான நஷ்ட வழக்கு போட வேண்டும். அது இனி எதிர்காலத்தில் பொய் வழக்கு போட நினைப்பவர்கள் மத்தியில் ஒரு பயம் உண்டாக்க அது வழிவகை செய்யும்.

இந்திய மருத்துவ சங்கம் இந்த வழக்கில் தலையிடும் போது அது மீடியா பப்ளிசிட்டி கூடிய நடப்பாகிவிடும். ஆகையால் மீடியாக்களின் கண்கொத்திப்பாம்பு கவனிப்பில் விசாரணை நடைபெறும். அப்போது சாட்சிகளை வாங்க முடியாது. நியாயமாக விசாரணை நடைபெற வாய்ப்பு அதிகம்.

மருத்துவர்களை அவர்கள் செய்யும் தொழிலுக்காக மதிக்க வேண்டும் என்று  பேசும் அதே சமயம் நம் தொழிலை இழிவு செய்யும் இது போன்ற நிகழ்வுகளில் நாம் என்ன செய்கிறோம் என்பதும் முக்கியம் என்று மருத்துவர்கள் உணர வேண்டும். நடந்தது என்னவென்பது தெரியாமல் மருத்துவரை திட்டுவது தவறென்றால் நடந்தது தவறென்று தெரிந்தும் வாய் மூடி இருப்பது பெருந்தவறு. படித்ததால் மட்டுமே ஒருவர் சக மருத்துவராகி விட முடியாது. அது மட்டுமே அவரின் தவறுகளை நியாயபடுத்த காரணமாகாது. நம் உரிமைகளுக்காக பல போராட்டம் செய்யும் போது மக்களின் ஆதரவை எதிர்ப்பார்க்கும் நாம் நம்மிடையே உள்ள கறுப்பாடுகளை இனம் கண்டுக்காட்டுவதே நியாயமாகும். அதை செய்யாதவரை அதற்காக போராடாத வரை மக்களின் கவனத்தை ஈர்பதே எங்கள் நோக்கம் என்று சூளுரைக்கும் நம் போராட்டங்களில் நியாயமில்லை...

Wednesday, June 27, 2012

இதை படிச்சிட்டு திட்டுங்க...




“இன்று டாக்டர்கள் ஸ்ட்ரைக்” என்ற flash news பார்த்ததுமே Facebookஇல் திட்டி அப்டேட் போடப்போகும் அன்பர்களே... என்ன விஷயமென்று கூட கேட்காமல் “திட்டுங்க எஜமான் திட்டுங்க ... இந்த டாக்டர்களே இப்படித்தான்...” என்று அதற்கு பதில் காமெண்ட்ஸ் போடப்போகும் நண்பர்களே... திட்டும் முன் இதை ஒரு முறை படித்து விட்டு திட்டுங்க..

இந்த ஸ்ட்ரைக் என்னவென்று முதலில் சொல்லி விடுகிறேன்... இதை நடத்துவது இந்திய மருத்துவச்சங்கம்... இது government, private என்றில்லாமல் எல்லா டாக்டர்களும் இருக்கும் பொது அமைப்பு... இதன் மூலம் 25/06/2012 அன்று ஒரு நாள் மட்டும் அரசு ஆஸ்பத்திரி அல்லாத மற்ற அமைப்புகளில் அவசர சிகிச்சை தவிர்த்து மற்ற நோயாளிகளை மாலை 6 மணிவரை பார்க்கவில்லை. இது ஒரு கவன ஈர்ப்புப் போராட்டம். சரி இதை இன்று செய்ய வேண்டிய அவசியம் என வந்தது???...

சில வருடம் முன் கேத்தன் தேசாய் என்ற அவமானத்தை கைது செய்து கிலோ கிலோவாக தங்கம் எடுத்தார்கள் ஞாபகம் இருக்கிறதா.... அந்த அவமானம் தலைவராக இருந்தது “Medical council of India (MCI)” என்ற அமைப்பு. அதுதான் எல்லா டாக்டர்களையும் கட்டுப்படுத்தும் தலைமை அமைப்பு... அதற்கு election council போல சுயமாக முடிவெடுக்கும் அதிகாரம் உண்டு . அது இருப்பதால்தான் அரசியல் தலையீடுகள் குறைவாக மருத்துவத்துறையில் இருக்கும் என்பதால் உருவாக்கப்பட்ட ஒன்று அது. புது மருத்துவக்கல்லூரிகள் துவங்குவதற்கு அனுமதி அளிப்பதிலிருந்து தவறு செய்யும் மருத்துவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் அத்தனை அதிகாரம் குவிந்த அமைப்பு அது. அதனால் யார் அதை control  செய்கிறார்களோ அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள டாக்டர்களை ஆளுகின்றார்கள் என்றால் மிகையாகாது...

கேத்தன் தேசாய் கைதுக்குப்பிறகே இந்த அமைப்பின் நிலைமை கேள்விக்குறியாக இருந்தது. இன்று அதை மட்டுமல்லாது Nursing council, pharmacy council என்று எல்லா கவுன்சில்களையும் கலைத்துவிட்டு அதன் இடத்தில் மத்திய அரசாங்கம் நியமிக்கும் ஒரு குழு செயல்படும் என்று சட்டமேற்றியிருப்பதுதான் முதல் காரணம் இந்த போராட்டத்திற்கு...

இந்த சட்டம் அமலுக்கு வந்தால் மருத்துவ தொழிலே மருத்துவர்கள் கையிலிருந்து சென்று விடும் அபாயம் உள்ளது. அதன் பின் அதிகார வர்க்கமும் அரசியல் வர்க்கமும் ஆசைப்பட்ட காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பாகவே இது உள்ளது. அரசியல் பணமுதலைகளின் கருப்பு பணம் வெள்ளையாக மருத்துவக் கல்லூரிகளை தொடங்கிக்கொள்ளலாம், எதிர் கட்சிகளை மிரட்ட அவர்கள் தலைவர்கள் நடத்தும் கல்லூரிகளை அனுமதி மறுக்கலாம், யார் வேண்டுமானாலும் பணம் தந்து அனுமதி பெற்று கல்லூரி தொடங்கலாம், எதிர்த்து கேள்விக்கேட்டால் அந்த மருத்துவரின் மேல் குற்றம் சுமத்தி அவரின் மருத்துவர் என்ற அதிகாரத்தையே பறிக்கலாம் என்ற நிலை வரும். ஒரு வேளை அது போல் அதிகாரத்தை பறித்தால் அதற்கு மேல் அப்பீல் செய்வதென்பது முடியாது. ஏற்கனவே இருந்ததை சீர் செய்வார்கள் என்று எதிர்ப்பார்த்திருந்த டாக்டர்களுக்கு இது அதிர்ச்சியே தந்துள்ளது. எந்த ஒரு டாக்டர்களின் அமைப்பையும் கலந்தாலோசிக்காமல் இது போன்ற மடத்தனமான முடிவெடுக்க காரணம் என்ன... ஒரு Professionஐ  அதை செய்பவர்கள் அல்லாத மற்றவர்கள் நிர்வாகிப்பதென்பது எந்த புத்தியுள்ள மனிதனும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.. அதும் மருத்துவம் போன்ற உயிர் காக்கும் தொழிலை அரசியல்வாதிகள் தீர்மானிக்கும் நபர்கள் அதிகாரம் செய்வதென்பது இந்த முடிவெடுத்தவர்களின் குறுகிய பார்வையே காட்டுகிறது. இத்தோடு விட்டார்களா...

இந்த சட்டத்தின் மற்றுமொரு புதிய விதி மருத்துவர்களின் தொழில் வாய்ப்புகளையே பறிப்பதாக உள்ளது. Medical councilன் மாநில அமைப்பு State medical council. எந்த மருத்துவ படிப்பு முடித்தப்பின்னும் இதில் பதிவு செய்யாமல் மருத்துவர்கள் வேலை செய்ய முடியாது. எந்த மாநிலத்தில் பதிவு செய்தாலும் இந்தியா முழுவதும் வேலை செய்யலாம். இப்பொழுது அதில்தான் சிக்கல். State Medical council பதிவு எந்த ஊரில் படிக்கிறோமோ அங்கேதான் செய்ய வேண்டும் மற்ற மாநிலத்தில் பணியாற்ற medical council நடத்தும் ஒரு தகுதி தேர்வெழுதியப் பின்னரே பணியாற்ற முடியும் என்று விதி கொண்டு வந்துள்ளனர். இது எழுப்பும் சிக்கல்கள், கேள்விகள் அதிகம். முதலாவதாக எந்த மருத்துவனும் படித்து பாஸ் செய்தப்பின்னரே  Medical councilல் பதிவு செய்ய முடியும். அதன் படி பார்த்தால் அந்த அந்த மாநில பல்கலைக்கழகங்கள் நடத்தும் தேர்வு போதாது அது அகில இந்திய சேவை செய்யும் அளவுக்கு தகுதியை தருவதில்லை என்று கருதுகிறதா மத்திய அரசு. அப்படியென்றால் தேவை பல்கலைக்கழகங்களும் அவற்றின் பாடமுறைகளையும் சரி செய்ய வேண்டியதே தவிர இது போன்ற சட்டங்களில்லை. இது மாநிலம் விட்டு மாநிலம் போய் படிக்கும் மருத்துவர்களையும், மற்ற மாநிலங்களில் திருமணம் செய்து செல்லும் பெண் மருத்துவர்களையும் மிகவும் பாதிக்கும். இன்னும் சொல்வதென்றால் இது நம் குடியாட்சித் தத்துவதிற்கே எதிரானது.

இந்த சட்டத்தை விட மிக கொடுமையானதும் மருத்துவர்களை அடிமைப்படுத்துவதுமான அடுத்த சட்டம் “Clinical Establishment act 2012”.  இதன்படி மருத்துவர்கள் கிளினிக் வைப்பதென்றால் அதற்கு அனுமதி பெற வேண்டும். அது மட்டுமல்லாது அந்த கிளினிக்கில் எந்த வகையான அவசர நோயாளி வந்தாலும் அவரை “Stabilize” செய்து அதன் பின்னரே மேற்சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். இந்த சட்டம் ஒரு மருத்துவர் பத்துக்கு பத்து ரூமில் வைத்து பார்க்கும் கிளினிக்களையும் உள்ளடக்குகிறது. மேலோட்டமாய் பார்த்தால் இது நல்லது போன்று தெரிந்தாலும் இது ஒரு நடைமுறை சாத்தியமில்லாத கிராம சேவைகளை பாதிக்கும் ஒன்று.

முதலில் அனுமதி பெறுவதென்பதும் அதை வருடாவருடம் புதுப்பிக்க வேண்டுமென்பதும் சாத்தியமா... அனுமதி தரும் அதிகாரியின் கையில் அளவுக்கு அதிகமான அதிகாரம் தரவே இது வழிவகை செய்யும். ஒரு வேளை அந்த அதிகாரி வேறு ஏதோ காரணத்தால் வன்மத்துடன் இருந்தால் தேவையில்லாத மன உளைச்சல்கள்தான் இதில் மிச்சம். வேலையை செய்யவே லஞ்சம வாங்கும் இந்த நாட்டில் இது போன்ற சட்டம் அதிகாரிகளுக்கு பணம் சம்பாதித்து கொடுக்கவே பயன்படும். இதனால் பாதிப்படையும் டாக்டர்களுக்கு முறையிடக் கூட சட்டம் இடம் தரவில்லை என்பது இந்த சட்டம் ஏற்றியவர்கள் டாக்டர்கள் மேல் கொண்டுள்ள வன்மைத்தையே காட்டுகிறது.

அடுத்து அவசர சிகிச்சை தருவது – எந்த மருத்துவனும் அடிப்பட்டு வரும் நோயாளியை முதல் உதவி கூட செய்யாமல் அனுப்ப போவதில்லை. அது Ethics.  ஆனால் “Stabilize” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்??? நெஞ்சுக்கூடு உடைந்து மூச்சு திணறும் நோயாளியை “Stabilize” செய்ய Ventilator போன்ற கருவிகள் வேண்டும். ஒவ்வொரு மருத்துவரும் அதை போல் கருவிகள் வாங்கி வைப்பதென்பது சாத்தியமா... எல்லா டாக்டர்களையும் ஒரே போல் பார்க்கிறது இந்த சட்டம். “Do no Harm” என்பதே மருத்துவனின் அடிப்படை பாடம். இது போன்ற அவசர சிகிச்சை தரும் தருணங்களில் என் திறமையை மீறி இந்த சிகிச்சை உள்ளதென்று தீர்மானிப்பது டாக்டர் உரிமையே தவிர சட்டத்தின் உரிமையில்லை. இதை பயன்படுத்தி தேவையில்லாத வழக்குகள் போடவே இந்த சட்டம் பயன்படும். இது நடைமுறைக்கு வந்தால் பாதிக்கப்படப் போவது எந்த பின்புலமுமில்லாத First generation Doctors தான்.

இதனால என்ன... நல்லதுதானே.. என்று நினைக்க வேண்டாம். இது போன்ற சின்ன கிளினிக்களின் மருத்துவச்சேவைகள் Government ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழியும் இந்தியா போன்ற நாட்டில் அவசியத்தேவை. ஒரு வேளை இது போன்றதொரு சட்டம் வந்தால் கிளினிக் போடுவது கூட பணம் படைத்தவர்களால் மட்டுமே முடியும். அது மேலும் பிரச்சினைகளே வளர்க்கும்.

இது மட்டுமல்லாது 3 வருட BMRC  கள்ள டாக்டர்கள் கோர்ஸ் உருவாக்கவும் இந்த சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதை பற்றி பேசுவதென்றால் தனி பதிவே போடலாம். சுருக்கமாக சொல்வதென்றால் இது அரசு அனுமதி பெற்ற போலி டாக்டர்களை உருவாக்கவே இது வழிவகுக்கும்.

இறுதியாக சில கேள்விகள்:

1. டாக்டர்கள் என்ன தீண்டத்தகாதவர்களாக... அவர்களின் குரலை கேட்க கூடாது என்று செயல்படுவதின் நோக்கம் என்ன???
2. இனி பணம் படைத்தவர்கள் தான் மருத்துவம் படிக்க வேண்டுமென்று நினைக்கிறதா இந்த அரசாங்கம்...
3. கொலை குற்றவாளிகளை விட மோசமாய் அப்பீல் செய்ய கூட வழியில்லாத சட்டம் போட வேண்டிய அவசியம் என்ன...
4. இதை எதிர்க்க ஸ்டிரைக் தவிர வேறு வழி என்ன இருக்கிறது... எப்படி மருத்துவர்களின் குரலை சமுதாயம் கவனம் கொடுத்து கேட்க செய்வது...

இந்த கேள்விகளுக்கு மனசாட்சிக்கு விரோதமில்லாமல் பதில் சொல்லி விட்டு திட்ட முடிந்தால் திட்டுங்கள்...

Monday, May 14, 2012

அன்புடனும் அக்கறையுடனும் பாலகுமாரன்...

சமீப காலங்களில் நான் படித்ததில் என்னை மிகவும் தொட்டது... அனைவரும் கண்டிப்பாக படியுங்கள். பகிருங்கள்... படித்தப்பின் எந்த நம்பிகையுள்ளவராய் இருந்தாலும் தன் எழுத்துக்களால் நம் வாழ்வை தொட்ட அந்த மனிதருக்காக ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்யுங்கள்....


இதை அழுத்தினால்......


இதை தெளிவாக படிக்கலாம்...






































மீண்டும் சந்திப்போம் நண்பர்களே......

Sunday, May 13, 2012

நித்தியானந்தாவும் பறக்கும்தட்டும்....


நித்தியானந்தா ஆதீனம் ஆனாலும் ஆனார், எல்லோர் வாய்க்கும் ஓட்ஸாகவே அது மாறிப்போனது. அதிலும் நான் மனநல மருத்துவன் என்ற காரணத்தால் இவ்வளவு நடந்தப்பின்னும் அவரை நம்புபவர்களுக்கு என்னதான் பிரச்சனை என்பது போன்ற கேள்விகளை அடிக்கடி சந்திக்கிறேன். இதை கேட்பவர்களின் அடிப்படை சந்தேகம் - இத்தனைக்கும் பின்னும் எப்படி இதுப்போன்ற ஒருவனை நம்ப முடியும் என்ற ஆச்சர்யமே...

இதற்கு காரணம் உள்ளதா????... இது நித்தியானந்தா என்ற தனிமனிதனின் "Charisma" என்று மட்டுமே சொல்ல முடியுமா?.... இதெற்கெல்லாம் விடை தெரிய வேண்டுமானால் உங்களுக்கு ஒரு பறக்கும் தட்டின் கதை தெரிய வேண்டும்.

1954ஆம் ஆண்டு. அமெரிக்காவில் மரியன் கீச் என்ற பெண்மணி ஒரு இயக்கத்தை ஆரம்பிக்கிறார். அதன் அடிப்படை நம்பிக்கை அவருக்கு வந்த ஒரு கனவு. அதில் வேற்றுக்கிரகவாசிகள் அவரை தொடர்புக்கொண்டு டிசம்பர் 21 ஒரு பெரும் வெள்ளம் ஏற்பட்டு உலகம் அழியப்போகிறதென்றும் அதற்குள் அவரிடம் வந்து சேர்பவர்களை அந்த வேற்றுக்கிரகவாசிகள் பறக்கும் தட்டில் வந்து காப்பாற்றுவார்கள் என்றும் கூறியதாக உலகத்துக்கு அவர் தெரிவிக்க அவர் வீட்டில் இடம் பிடிக்க பணம் கொண்டு வந்து கொட்டி பலர் சேர்ந்தனர். அவர்களில் ஒருவர் லான் ஃபெஸ்டிங்கர்(Leon Festinger) என்ற உளவியல் ஆராய்ச்சியாளர். அவர் இந்த கூத்தின் முடிவை காண்பதென்ற நோக்கத்துடன் வந்தவர். அந்த தினமும் வந்தது.

இரவு 12 ஆனது. அங்கிருந்த அனைவரும் சற்றே கலக்கம் அடைய துவங்கினர். நேரம் ஆக ஆக அனைவருக்கும் உண்மை உரைத்தது - "எந்த பறக்கும் தட்டும் வரப்போவதில்லை. உலகம் நாளையும் இருக்கும் நாளை மறுநாளும் இருக்கும்." என்று.

உடனே அவர்கள் மரியன் கீச்சை தூக்கிப்போட்டு உதைத்திருப்பார்கள் என்று நீங்கள் எதிர்ப்பார்த்திருக்கலாம். ஆனால் நடந்ததோ வேறு...

உலகம் அழிய ஒரு மணி நேரமிருக்கையில் மரியன் கீச்சுக்கு ஒரு புது செய்தி அயல்கிரகவாசிகளிடமிருந்து வந்தது. இந்த பூமியில் அவர்கள் சொல்லை மதிக்கும் மனிதர்கள் இருப்பதால், இதற்கு மற்றுமொரு வாய்ப்பு தர தீர்மானித்து வெள்ளத்தை சற்றே திசைத் திருப்பி விட்டார்கள்!!! என்று... இதை கேள்விப்பட்ட அந்த கூட்டம் இந்த நல்ல செய்தியை பரப்பி இன்னும் அதிகம் பேரை நம்ப வைத்து இந்த உலகத்தின் ஆயுளை நீடிப்பதேன்று கிளம்பி விட்டனர்.!!!!!!!!!!

இதற்கு லான் ஃபெஸ்டிங்கர் கொடுத்த பெயர்தான் - காக்னிடிவ் டிஸ்சொனன்ஸ் (Cognitive Dissonance).  பல்லையுடைப்பது போன்று இருந்தாலும் இது ஒரு வகையில் நமக்கு அறிமுகமான ஒரு விஷயமே. திராட்சைப்பழத்துக்கு ஆசைப்பட்ட நரியின் கதை கூட இதற்கு ஒரு உதாரணம்தான்.

நித்தியானந்தாவுக்கும் இந்த கதைக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா....

மனித வாழ்வில் உள்ள நிலைகள் மாறுமென்பதை ஏற்றுக்கொள்ள மனிதர்களுக்கு ஒரு ஆதாரம் தேவைப்படுகிறது. நித்தியானந்தா, மரியன் கீச் போன்றவர்கள் பக்தியாகவோ பறக்கும் தட்டில் வந்து அழைத்து செல்லும் அயல்கிரகவாசிகளாகவோ அந்த ஆதாரத்தை தருகின்றனர். அதனால்தான் அவர்கள் உலகம் அழியும் என்றாலோ ஹீலிங் டச் முலம் வியாதிகள் குணமாகும் என்றாலோ உடனே நம்புகின்றனர். ஏதோ ஒரு தருணத்தில் இவர்கள் சொல்லும் விஷயம் பொய்க்கும் போது நிலை மாறுமென்ற ஆதார நம்பிக்கையும் கேள்விக்குறியாகின்றது. ஆனால் மனம் அதை ஏற்க மறுக்கிறது – காரணம் அதை ஏற்பதென்பது வாழ்வின் அடிப்படையே தகர்க்கிறது. இதே கஷ்டங்கள்தான் நீடிக்குமென்றால் வாழ்வதின் அர்த்தம்தான் என்ன? இந்த முரண்பாட்டைதான் காக்னிடிவ் டிஸ்சொனன்ஸ் (Cognitive Dissonance) என்கிறார் லான் ஃபெஸ்டிங்கர்.

இதை தீர்ப்பதென்பது எப்படி? அவர்களுக்கு மூன்று வழிகள் உள்ளது.

எந்த நம்பிக்கை முரண்பாட்டை ஏற்படுத்துகிறதோ அதை மாற்றிக்கொள்ளலாம்.. (எந்த சாமியார் உண்மையா இருக்கான்... இவனால மட்டும்தான் என் கஷ்டத்தை தீர்க்க முடியுமா என்ன... பறக்கும் தட்டாவது வரதாவது...) ஆனால் இதுதான் இருப்பதிலே கடினமான வழி. இதை அவர்கள் செய்தால், இந்த பதிவுக்கே அவசியமில்லை.

அந்த நம்பிக்கையுடன் புது நம்பிக்கைகளை சேர்த்து புதியதொரு நம்பிக்கையை உருவாக்கி கொள்வது. ( பிரம்மச்சார்யம் என்பதை கடைப்பிடிக்க முடியாதவர்கள் துணை ஏற்று கொள்வது தப்பில்லை. அதும் பிரம்மச்சார்யத்தின் ஒரு அங்கம்தான்.(!!!!!!!!) பறக்கும் தட்டு நம்புபவர்கள் இருப்பதால் வரவில்லை. அதனால் இந்த செய்தியை பரப்பி எல்லாரையும் நம்ப செய்வது நம் கடமை.)

கடைசியாக அந்த முரண்பாட்டை ஏற்க மறுத்தோ அது ஒன்னும் பெரிய விஷயமில்ல என்று சமாதானம் கூறியோ அதன் முக்கியத்துவத்தை குறைத்துக்கொள்ளலாம். (அந்த டேப் பொய்... அவர் என்னைக்காவது நான் பிரம்மச்சாரின்னு சொல்லிருக்காரா..)

இப்பொழுது யோசியுங்கள்... நித்தியானந்தா என்று மட்டுமில்லை. எத்தனை விஷயங்களில் நம்மை நாமே இதுப்போன்று ஏமாற்றியுள்ளோம். நித்யானந்தா ஒரு நம்பிக்கை. அதேபோல்தான் தம் அடித்தால் டென்ஷன் குறையும், தண்ணி அடித்தால் கவலை மறக்கும், பைனான்ஸில் பணம் போட்டால் பணம் சீக்கிரம் பெருகும் என்பதெல்லாம். தினம் வாழ்க்கையில் தவறென்று தெரிந்தும் ஏற்க மறுப்பது எத்தனை... நம் முரண்பாடுகளை ஏற்று அவற்றை மாற்றும் முதல் வழியை தேர்ந்து எடுக்கும் தைரியம் உண்டா நமக்கு...

அடுத்த முறை இதுப்போன்ற ஒரு சந்தர்ப்பம் உங்கள் வாழ்வில் ஏற்பட்டால் இதை சிந்தனை செய்யுங்கள் நண்பர்களே...

Monday, May 7, 2012

ஒரு சட்டமும் சில கேள்விகளும்...

கடந்த வாரம் நம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் குலாம் நபி நன்றாக பிரியாணி மொக்கி விட்டு விட்டத்தைப்பார்த்து படுத்து பல் குத்திக்கொண்டே NRHM (தேசிய ஊரக வளர்ச்சி திட்டம் ) ஏன் உருப்படாமல் போகிறது என்று யோசிக்கும் பொழுது டொய்ங் என்று அவருக்கு ஒரு பல்பு உதிக்க "எடுறா பேப்பரை" என்று ஒரு உத்தரவு போடுகிறார்.

"இதனால் அறிவிக்கப்படுவது என்னவென்றால் நம்மூர்ல படிச்சுப்புட்டு அடிச்சு பிடிச்சு எப்படியோ வெளியூர் படிக்க போகிற பயபுள்ளைங்க திரும்பாம அங்கனையே தங்கிடறாங்க. இதனால நம்ம கிராமத்துல வேல பாக்க ஆள் இல்லாம போய்டுச்சு. போன வருஷம் மட்டும் படிச்ச 1,20,000 பேர்ல 3000 பேர் வெளிய போய்ட்டாங்க. அதுல 30% திரும்பியும் வந்துட்டாங்க. இருந்தாலும் போன 70% பேரால நம்ம ஊர் ஜனங்களுக்கு எம்புட்டு எழப்பு... இதனால பெரியவங்கலாம் ( வேற யாரு அண்ணன்ந்தேன்....) யோசிச்சு(!!!!) இனி அமெரிக்கா படிக்க போற டாக்டர்ல்லாம் உங்க சொத்த எழுதிக்கொடுத்துட்டு (Bond எழுதி கொடுத்து விட்டு) போய்டணும்" என்று தண்டோரா போடு விட்டார்.

நகைச்சுவை தவிர்த்து பார்த்தால் இது எந்த லட்சணத்தில் நம் நாட்டின் அதிகாரிகளும் அமைச்சர்களும் இயங்குகின்றனர் என்று தெரிய வைக்கும் ஒரு ஆணை. இது எழுப்பும் கேள்விகள் பல.

இந்த ஆணை வெளிநாடு செல்லும் மருத்துவர்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. என் கேள்வி ஏன் மற்ற வேலை செய்பவர்களில் யாரும் வெளிநாடு செல்லவில்லையா? உண்மையில் அன்றிலிருந்து இன்று வரை வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளவர்கள் மற்றவர்கள்தான். அவர்களை விட்டுவிட்டு மருத்துவர்களை மட்டும் குறிவைப்பது ஏன்? அது சரி அமெரிக்கா செல்லும் மருத்துவர்களை கட்டுப்படுத்துவீர்கள்... NOC கேட்காத ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அரபு நாடுகளுக்கு போகும் மருத்துவர்களை என்ன செய்வீர்கள்...

வெளிநாடு சென்று வாழும் இந்தியர்களுக்கு உந்துதல் ஏது? யாரும் தன் சொந்தங்களை மண்ணை விட்டு சென்று மொழி புரியாத மனிதர்களுடன் போராட விரும்பி செல்வதில்லை. இங்கே காட்டப்படும் அநியாயமான பாகுப்பாடும் திறமை இருந்தும் போட வேண்டிய எதிர்நீச்சல்களுமே அவர்களை அந்நிய மண்ணின் சுகங்களை பெரிதாக எண்ண வைக்கிறது. அதை தீர்க்காமல் இது போன்ற அறிவிப்புகள் வெளியிடுவது தங்களின் தொலைநோக்கு பார்வையின்மையை மறைக்க இவர்கள் நடத்தும் நாடகங்களே தவிர வேறொன்றுமில்லை. 2100 மருத்துவர்கள்தானா படித்தவர்கள். மிச்சமுள்ள 117900 பேர் கொண்டு நம் கிராமங்களை முன்னேற்ற முடியாதா?

சரி... இவர் சொல்வது போல் சென்றவர்கள் திரும்பி வருகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அவர்களை எங்கே வேலைப்பார்க்க சொல்கிறார். எந்த வசதியுமில்லாத கிராமப்புறங்களில் இவர்களால் வேலைப்பார்க்க முடியுமா. அது மயிலை பாட சொல்வது போன்று முரணான விஷயமில்லையா? நோபல் பரிசு பெற்ற ஹர்கோபிந்த் குரானா, ராமகிருஷ்ணன் போன்றவர்களுக்கேற்ற வசதிகளை நாம் இங்கே ஏற்படுத்தி விட்டோமா? அதில்லாமல் அவர்களை செல்ல விடாமல் தடுத்திருந்தால் அது மனிதக்குலத்துக்கு அவர்களின் அர்ப்பணிப்பை தடுக்கும் செயலாகியிருக்காதா? 

இது போன்ற அர்த்தமில்லாத சட்டம் இயற்றுவத்தின் மூலம் நம் கவனத்தை உண்மையான பிரச்சனைகளிலிருந்து திசைத்திருப்பி சுவிஸ் வங்கிகளில் பணத்தை குவிக்கும் அரசியல்வாதிகளை விட தன் வாழ்க்கையின் நலனுக்காக நாட்டை விட்டு வெளியேறும் மருத்துவர்கள் எவ்வளவோ மேல்...

சரிதானா....

சிந்தனை செய்யுங்கள்....

Friday, May 4, 2012

யார் குற்றம்

செய்திதாள்களில் சில சமயம் வினோதமான செய்திகளை படிக்க கிடைப்பதுண்டு. நேற்று மும்பை ஹைகோர்ட்டில் ஒரு விவாகரத்து வழக்கு வந்தது. அதன் சாராம்சம் இதான்.

பிரதீப் என்பவர் தன் மனைவியை விவாகரத்து செய்ய கோரியுள்ளார். அதற்கு அவர் கூறியுள்ள காரணங்கள்.
1. மனைவிக்கு சமைக்க தெரியவில்லை.
2. அவருக்கு துணி மடிக்க தெரியவில்லை.
3. தினமும் சாமி கும்பிட மறுக்கிறார்
4. அவர் சம்பளத்தை அப்படியே தர மறுக்கிறார்.

இதெல்லாம் பரவாயில்லை என்பது போன்ற கடைசிக்காரணம் - முதலிரவில் அவர் தன் கணவனிடம் ஆணுறை அணிய சொல்லுயிருக்கிறார். காரணம் அவர்களது குடும்பச்சூழல் காரணமாக சற்றே பணம் சேர்ந்தப்பின் குழந்தைக்கு முயற்சிப்போம் என்று.

இந்த வழக்கை பற்றி படித்ததுடன் என் மனதில் எழுந்த கேள்விகள் இவை.

1. இதெல்லாம் ஒரு காரணமா ஒரு மணவாழ்க்கையை முறிக்க.
2. ஒரு கோர்ட்டில் இதை காரணங்களாக சொல்லும்மளவுக்கு ஆணாதிக்க மனம் கொண்டவர்களாக இருக்கும் அந்த கணவனுக்கும் அவன் குடும்பத்துக்கும் இதை கோர்ட்டில் சொல்லும் வக்கீலுக்கும் என்ன தண்டனை.
3. அந்த பெண்ணிடம் நீதிபதி படித்த நீ ஏன் இந்த திருமணத்துக்கு ஒப்புக்கொண்டாய் என்று கேட்டதற்கு தன் தங்கை திருமணத்திற்க்காக தன் திருமணத்தை அவசரப்படுத்தியதால் ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று. என்று கூறியுள்ளார். (அவரின் வயது 26). கல்யாணத்தை கடமையாய் நினைத்து ஒத்து வராத இரண்டு பேரை சேர்த்து வைத்து அவர்களின் வாழ்வை கேள்விகுறியாக்கியது எது - பெண்களின் திருமணத்தை கடமையாய் கருதும் பெற்றோரா? அந்த நெருக்குதலை தரும் இந்த சமுதாயமா?
4. எத்தனையோ பொருத்தம் பார்க்கும் போது பேசி பழக சந்தர்ப்பங்களை தந்து மனப்பொருத்தம் பார்க்க தயங்குவது ஏன்?

இதையேதான் அந்த நீதிபதியும் சொல்லியுள்ளார் -

"In their order, the judges said the case was an eye-opener for those who were yet to marry. They said that especially in the case of arranged marriages, the prospective husband and wife should get to know each other and see if they could live happily together. "It is the duty of (both sets of) parents to consider various aspects before the actual marriage takes place.""


எத்தனை யோசித்தாலும் இறுதி வரை விடை தெரியாத கேள்வி இது ஒன்றுதான்....

"பெண் சுதந்திரம் என்ற அடிப்படை மனித நாகரீகத்தை என்று நம் சமுதாயம் கற்கும்???"


சிந்தனை செய்யுங்கள் நண்பர்களே.....

Thursday, May 3, 2012

சனாகானும் பத்திரிகை தர்மமும்

எப்பொருள் குறள் யாருக்கு பொருந்துமோ இல்லையோ பத்திரிகைகளுக்கு நன்கு பொருந்தும். இன்றும் நம் மக்களை பொறுத்த வரை பத்திரிகையால் ஒருவன் குற்றம் சாட்டப்பட்டால் அவன் குற்றவாளி. அச்சில் ஏற்றப்பட்ட குற்றம் எந்த நீதிமன்றத்திலும் நிருப்பிக்கபடாவிட்டாலும் குற்றமே.

இன்று தினமலர் வலைத்தளம் சென்றவர்கள் இந்த செய்தியை கண்டிப்பாக பார்க்கலாம்.


ஆனால் இதை படித்த எத்தனை பேர் இந்த புகைப்படத்தை பார்த்திருக்க போகிறீர்கள்.


இதென்னடா படம் என்கறீர்களா....

இதில் இருப்பவர்கள்தன அந்த செய்தியில் வந்த கைதான பெண்கள்... இதில் வட்டமிட்டு காட்டப்பற்றிருபவர்தான் சனா கான். அவர் ஒரு junior artist பாலிவுடில்.

இப்பொழுது இதை ஆழ்ந்து சிந்தித்துப்பாருங்கள்....

இன்று எத்தனை பேர் அந்த செய்தியை வாசித்திருப்பார்கள். அவர்கள் அனைவரின் எண்ணத்திலும் இனி சனாகான் ஒரு விபச்சாரி. எந்த தவறும் செய்யாமல் அவரை ஒரு கூண்டில் ஏற்றப்பட்டு தண்டனையும் வழங்கிவிட்டார் அந்த பத்திரிகைக்காரர். நிஜமாக குற்றம் புரிந்த அவருக்கு என்ன தண்டனை.

இதே செய்தியை நடிகையல்லாத மற்றொரு பெண் பற்றி வந்திருந்தால் எத்தனை பேர் உடனே நம்புவோம். அவ்வளவு ஏன்... இதே போன்று ஒரு நடிகரை கைது செய்ததாக செய்தி வந்தால் உடனே நம்புவோமா... ஏன் இந்த முரண்... ஒரு நடிகை என்பதாலா இல்லை ஒரு பெண் என்பதாலா..

நடிகை என்ற ஒரே காரணத்துக்காக அவர் பற்றிய ஒரு ஆதாரமில்லாத செய்தியை உடனே வெளியிட்ட அந்த பத்திரிக்கை நண்பரை போல் எத்தனை பேர் நம்மில் குற்றங்களை நம்பி ஆதாரங்களை புறந்த்தள்ளுகிறோம்.

இறுதியாக ஒரு சினிமா செய்தியைக்கூட விசாரித்து வெளியிட முடியாத நிருபரும் அதன் உண்மை தன்மையை உறுதி செய்யாமல் வெளியிடும் ஆசிரியரும் கொண்ட இந்த பத்திரிகையின் வேறு எந்த செய்தியை நாம் நம்புவது...

சிந்தனை செய்யுங்கள்.....